கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில் உள்ள பர்ஷால் கிராமத்தில் பஞ்சாயத்து துணை தலைவராக இருந்த ஆளும் திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பகதூர் ஷேக், கடந்த திங்கட்கிழமை படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, இந்த கிராமத்தில் நடந்த வன்முறையில் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்ததில், 2 சிறுவர்கள், பெண்கள் உட்பட 8 பேர் கருகி பலியாகினர். இந்த சம்பவத்தை விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை முதல்வர் மம்தா அமைத்துள்ளார். இந்நிலையில், இந்த சம்பவம் பற்றி தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், விசாரணையை சிபிஐ.யிடம் ஒப்படைக்கும்படி மாநில அரசுக்கு நேற்று உத்தரவிட்டது. தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவநத்சவா, நீதிபதி பரத்வாத் ஆகியோர் அடங்கிய அமர்வு, அடுத்த மாதம் 7ம் தேதி இந்த சம்பவம் குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும்படியும் சிபிஐ.க்கு உத்தரவிட்டுள்ளது. இதை இம்மாநில எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளன.ஆதாரங்கள் சேகரிப்பு: சிபிஐ.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், சிபிஐ.யின் தடய அறிவியல் ஆய்வகப் பிரிவை சேர்ந்த 8 பேர் அடங்கிய குழுவினர், பர்ஷால் கிராமத்துக்கு நேற்று சென்று ஆதாரங்களை சேகரித்தனர். …