கோவில்பட்டி: நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சல் துறை சார்பில் தேசியக்கொடியுடன் 1500 மாணவிகள் 75 எண் வடிவத்தில் அமர்ந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் ரூத் ரத்தினகுமாரி தலைமை வகித்தார். அஞ்சல் துறை உதவி கோட்ட கண்காணிப்பாளர் வசந்திதேவி முன்னிலை வகித்தார். தலைமை அஞ்சல் அலுவலர் ரெஜினா, அஞ்சல் வணிக வளர்ச்சி அலுவலர் சங்கரேஸ்வரி, ஆசிரியர் அமலபுஷ்பம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எனது பார்வையில் இந்தியா 2047, போற்றப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் வீரர்கள் என்ற தலைப்பில் மாணவ மாணவிகள் பிரதமர் மோடிக்கு கடிதங்கள் எழுதினர்.முன்னதாக 75வது சுதந்திர தினத்தைக் குறிக்கும் வகையில் தேசியக்கொடியுடன் 1500 மாணவிகள் 75 எண் வடிவத்தில் அமர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். தொடர்ந்து அஞ்சல் துறை அதிகாரிகள் 75வது சுதந்திர தின சிறப்பு மற்றும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தனர். நிறைவில் 1500 மாணவிகள் பிரதமருக்கு எழுதிய அஞ்சல் அட்டைகளை தலைமை அஞ்சல் அலுவலர் ரெஜினாவிடம் ஒப்படைத்தனர். ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர் அமலபுஷ்பம் செய்திருந்தார்….