Tuesday, May 21, 2024
Home » 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு: ஊறுகாய், ஜாம், எண்ணெய் பாட்டில் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை

75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு: ஊறுகாய், ஜாம், எண்ணெய் பாட்டில் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை

by kannappan

மீனம்பாக்கம்: 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊறுகாய், ஜாம், எண்ணெய் பாட்டில் எடுத்து செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திரதின விழா வரும் 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. விழா கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக, ஒன்றிய உளவு துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகமாக கூடும் முக்கிய ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.சென்னை விமான நிலையத்திலும் இந்த பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டு 5 அடுக்கு பாதுகாப்பு முறை நேற்றிரவு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை, பிரதான நுழைவு கேட் பகுதியிலேயே நிறுத்தி, சந்தேகப்படும் வாகனங்களை, பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் உதவியுடன் சோதனையிடுகின்றனர். அதேபோல் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் பரிசோதிக்கின்றனர். விமான நிலைய வளகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். கார் பார்க்கிங் பகுதியில் நீண்ட நேரமாக நிற்கும் கார்களை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனையிட்டு விசாரிக்கின்றனர்.பார்வையாளர்கள் வருகைக்கான தடை ஏற்கனவே அமலில் இருப்பதால், அதை மேலும் தீவிரமாக செயல்படுத்துகின்றனர். அதேப்போல் பாஸ்கள் வழங்குவதிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் பகுதியில் கூடுதல் பாதுகாப்பு ேபாடப்பட்டுள்ளது. அப்பகுதியில் ஏற்கனவே உள்ள சிசிடிவி கேமராக்களுடன் தற்போது கூடுதலாக சிசிடிவி கேமராக்களை அமைத்து, விமான நிலைய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையில் இருந்து 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.விமான பயணிகளுக்கும் வழக்கமாக நடக்கும் சோதனைகளுடன் மேலும் ஒரு முறை பாதுகாப்பு சோதனை நடத்தப்படுகிறது. குறிப்பாக பயணிகள் கைகளில் எடுத்து வரும் கைப்பைகளை துருவித்துருவி சோதிக்கின்றனர். பயணிகள் திரவ பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்ற பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளன. அதேப்போல் விமானங்களில் சரக்கு பார்சல்கள் ஏற்றும் பகுதிகளிலும் தீவிரமாக கண்காணித்து, பார்சல்கள் அனைத்தையும் பல கட்ட சோதனைக்கு பிறகே விமானங்களில் ஏற்ற அனுமதிக்கின்றனர். விமான பயணிகளுக்கு கூடுதலாக சோதனைகள் நடத்தப்படுவதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவும் வருவதற்கு சென்னை  விமானநிலைய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சென்னை விமான நிலையம் முழுவதும் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் 20ம் தேதி நள்ளிரவு வரை இந்த பாதுகாப்பு விதிமுறைகள் அமலில் இருக்கும் என்றும், தற்போதைய 5 அடுக்கு பாதுகாப்பு வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பான 7 அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படும் என்றும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர்….

You may also like

Leave a Comment

15 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi