சென்னை: 75வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு வாரத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை மண்டல அலுவலகத்தில் சமூக நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என்று சென்னை, மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் கூறினார். 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்திற்கு நடத்தப்படுகிறது. இதில் பொதுமக்களுக்கு பயன்பெறும் வகையில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்க ஏற்படும் சந்தேகங்கள், கண் பரிசோதனை முகாம், முழு உடற்பரிசோதனை முகாம், ஓவியபோட்டிகள், மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கோவேந்தன் கூறியதாவது: 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வரும் 21ம் தேதி முதல் 27ம் தேதி வரை மண்டல அலுவலகத்தில் சமூக நலத்திட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. அதன்படி வரும் 21ம் தேதி அண்ணாசாலையில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்தில் அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து இலவச முழு உடற் பரிசோதனை முகாமும், 22ம் தேதி பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரை மண்டல அலுவலகத்தில் காணொலி மூலம் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது ஏற்படும் சந்தேகங்கள், குறைபாடுகள், புகார்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அதற்காக பிரத்யேகமாக வாட்ஸ் அப் எண்கள் 73053 30666 அறிவிக்கப்பட்டது. இந்த எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். அதைத்தொடர்ந்து 23ம் தேதி புரசைவாக்கத்தில் உள்ள அழகப்பா பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 24ம் தேதி ஓவியக் கண்காட்சிகள் துவக்கி வைக்கப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். 25ம் தேதி சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அகர்வால் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்பரிசோதனை முகாம் நடத்தப்படும். 26ம் தேதி கிண்டி அண்ணா பல்கலை கழக மாணவர்களுடன் இணைந்து 75வது சுதந்திர தினத்தை வலியுறுத்தும் வகையில் 75 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 27ம் தேதி மாநகராட்சியுடன் இணைந்து பெசன்ட் நகர் கடற்கரையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு கோவேந்தன் கூறினார். …