ஈரோடு, ஏப்.17: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் 7140 தபால் வாக்குச்சீட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தினர், தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் ஆகியோர் தபால் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்படி 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு தேடி சென்று தபால் வாக்குகள் பெறப்பட்டன.
இதேபோல, தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் பயிற்சி முகாம் நடைபெற்ற மையங்களில் தபால் வாக்குகளை செலுத்தினர். தேர்தல் பணியாற்றும் போலீசார் கலெக்டர் அலுவலகத்தில் தபால் வாக்குகளை செலுத்தினர். பதிவான தபால் வாக்குகள் அனைத்தும் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள தபால் வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் பணியாற்றும் அரசு ஊழியர்களிடம் பயிற்சி மையத்தில் இருந்து 4,268 தபால் வாக்குகள் சேகரிக்கப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பணியாற்றும் ஊழியர்கள் 2,866, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து 6 தபால் வாக்குகளும், ராணுவத்தினர் 8 தபால் வாக்குகள் என 7,140 தபால் வாக்குகள் பதிவாகி இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.