திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே உள்ள பள்ளிக்கல் பகுதியைச் சேர்ந்த 40 வயதான ஒரு பெண்ணுக்கு 11, 7 வயதில் 2 மகள்கள் உள்ளனர். கணவனை பிரிந்து சிசுபாலன் என்பவருடன் குடும்பம் நடத்தி வந்தார். இளைய மகளை மட்டும் தன்னுடன் வைத்திருந்தார். இந்நிலையில் சிசுபாலன் அந்தப் பெண்ணின் இளைய மகளை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூத்த மகள், தாயின் வீட்டுக்கு சென்ற போது தான் தன்னுடைய தங்கையை சிசுபாலன் கொடூரமாக பலாத்காரம் செய்யும் விவரம் தெரியவந்தது. இது குறித்து அந்த சிறுமி தன்னுடைய பாட்டியிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து பள்ளிக்கல் போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிசுபாலனையும், சிறுமியின் தாயையும் கைது செய்தனர். இந்த வழக்கு திருவனந்தபுரம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணையின் போது கடந்த வருடம் சிசுபாலன் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் சிறுமியின் தாய்க்கு 40 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை நேற்று விதிக்கப்பட்டது.