தஞ்சாவூர் : தஞ்சாவூரில் நகை வியாபாரியிடம் 7 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் அருகே கடந்த 8ம் தேதி இரவு ஹாதாராம் (எ) நகை வியாபாரி 7 கிலோ வெள்ளி நகைகளுடன் டூ வீலரில் தனது நண்பருடன் சென்று கொண்டிருந்தார். அவரை 2 பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், அவர் மீது பைக்கை மோதினர். இதில் கீழே விழுந்த ஹாதாராமிடமிருந்து 7 கிலோ வெள்ளி நகைகளை பறித்துக் கொண்டு பைக்கில் தப்பி ஓடினர்.
இது குறித்து ஹாதாராம் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எஸ்.பி ஆசிஷ்ராவத் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சோமசுந்தரம், உதவி ஆய்வாளர் தென்னரசு மற்றும் போலீசார் கொள்ளை நடந்த பகுதிகளில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.இந்நிலையில் கொள்ளையர்கள் விட்டு சென்ற டூ வீலர், செல்போன் கொண்டு திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (27), கும்பகோணத்தை சேர்ந்த சரவணன் (28), தீனா (21), கரண் (26) மற்றும் 16 வயது சிறுவனையும் கைது செய்தனர். இதில் அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 7 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் தொடர் விசாரணையில், இவர்களில் மணிகண்டன், கரண் இருவரும் கடந்த 2021ம் ஆண்டு அரியலூர் மாவட்டம் தா.பழூரில் நடந்த வழக்கறிஞர் சாமிநாதன் கொலை வழக்கில் தொடர்பு உடையவர்கள் என்பது தெரிய வந்தது. இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.