சென்னை: நாடாளுமன்ற தேர்தல் கடந்த 16ம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இதனால், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், மாநில அரசு என அனைத்து தரப்பினருக்கும் கடும் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கண்காணிப்பு பணியில் 700க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் எடுத்துச் சென்றால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்கின்றனர். மேலும் 8 மணி நேரம் அடிப்படையில் 3 ஷிப்ட்டுகளாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உள்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் காவலர்களுடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 6வது நாளான நேற்று காலை 9 மணி நிலவரப்படி பணம் ரூ.9.32 கோடியும், மதுபான வகைகள் ரூ.59லட்சம், போதைப்பொருள் வகைகள் ரூ32 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பரிசு பொருட்கள் ரூ.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.