சென்னை, பிப். 21: 63வது தடகள போட்டியில் 45 பதக்கங்கள் பெற்று சென்னை காவல் அணியினர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். அவர்களை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேற்று நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார். கோவையில் 63வது தமிழ்நாடு காவல் மண்டலங்களுக்கு இடையேயான தடகள போட்டி கடந்த 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் சென்னை பெருநகர காவல், ஆவடி காவல் ஆணையரகம், தாம்பரம் காவல் ஆணையரகம், வடக்கு மண்டலம், தெற்கு மண்டலம், மேற்கு மண்டலம், மத்திய மண்டலம், ஆயுதப்படை, தமிழ்நாடு கமாண்டோ படை என 9 அணிகள் கலந்துகொண்டன.
இந்த போட்டியில் ெசன்னை பெருநகர காவல் அணியின் ஆண்கள் தடகள அணியினர் 6 தங்கம், 4 வெள்ளி, 6 வெண்கலம் என 16 பதக்கங்களும், பெண்கள் தடகள அணியினர் 14 தங்கம், 10 வெள்ளி, 5 வெண்கலம் என 29 பதக்கங்களும் என மொத்தம் சென்னை பெருநகர காவல் தடகள அணியினர் 20 தங்க பதக்கங்கள், 14 வெள்ளி பதக்கங்கள், 11 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 45 பதக்கங்கள் பெற்றது. மேலும், ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்திற்கான முதல் பரிசுக்கான கேடயம் பெற்று சென்னை பெருநகர காவல்துறைக்கு பெருமை சேர்த்துள்ளது. இதையடுத்து தடகள போட்டியில் வெற்றி பெற்ற சென்னை பெருநகர காவல் அணியினரை நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது காவலர்கள் தங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கேடயம் வழங்கி வாழ்த்து பெற்றனர்.