புதுடெல்லி: ஆந்திரா, ஓரியண்டல், அலகாபாத், சிண்டிகேட், யுனைடெட், கார்ப்பரேஷன் ஆகிய 6 வங்கிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களின் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்க வேண்டுமென தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) துறை அறிவுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் சில வங்கிகள் இணைப்பு காரணமாக, வங்கிகளின் ஐஎப்எஸ்சி கோடு மாறி உள்ளது. பழைய ஐஎப்எஸ்சி கோடுகள் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் செயல் இழந்துள்ளன. இதனால், இணைக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் பிஎப் கணக்கில் வங்கி விவரங்களை புதுப்பிக்குமாறு இபிஎப்ஓ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘ஆந்திர வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், அலகாபாத் வங்கி, சிண்டிகேட் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் கார்ப்பரேஷன் வங்கி ஆகிய வங்கிகள் பிற வங்கிகளோடு இணைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த வங்கிகளின் கணக்குகள் பிஎப் கணக்கில் இணைத்திருக்கும் நபர்கள் புதிய ஐஎப்எஸ்சி எண்ணை வங்கியில் இருந்து பெற்று, அதன் விவரங்களை யுஏஎன் போர்டலில் பதிவேற்றம் செய்து ஒப்புதல் பெற வேண்டும். அப்போதுதான், ஆன்லைனில் பிஎப் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுப்பிப்பது எப்படி?* https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதளத்திற்கு சென்று உங்களின் யுஏஎன் மற்றும் பாஸ்வேர்டை பதிவிட்டு உள்நுழையவும்.* பின்னர், மேனேஜ் என்ற ஆப்ஷனை கிளிக் செய்து கேஒய்சி என்பதை தேர்ந்தெடுக்கவும். அதில் வங்கி விவரங்களுக்கான பிரிவை தேர்வு செய்து, அதில் ஐஎப்எஸ்சி எண்ணை பதிவிட்டு சேமிக்கவும். * இந்தத் தகவல் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, கேஒய்சி புதுப்பிக்கப்படும். இந்த தகவல் புதுப்பிக்கப்பட்டால் மட்டுமே பிஎப் நிதி கோரல் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் கிடைக்கும்….