நாகர்கோவில், ஆக.10: பள்ளி கல்வித்துறையின் மாநில மதிப்பீட்டு புலம் சார்பில் மாவட்டந்தோறும் 6 முதல் 12ம் வகுப்பு வரை மதிப்பீடு சார்ந்த வினாடி வினா நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டங்களில் ஒன்றான மாநில மதிப்பீட்டு புலம் அரசாணை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி வழி வினாடி வினா நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 16 முதல் படிப்படியாக 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்வுகளை நடத்த வேண்டும். இந்த வினாடி வினா நிகழ்வை உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் நடத்த வேண்டும். உயர் தொழில்நுட்ப ஆய்வகத்தில் ஏற்படும் தொழில்நுட்ப குறைபாடுகள், வினாத்தாள்களை உருவாக்கும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்த ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.