Friday, May 17, 2024
Home » கார் டிரைவர் கொலையில் மேலும் 5 பேர் சிக்கினர்

கார் டிரைவர் கொலையில் மேலும் 5 பேர் சிக்கினர்

by Ranjith

பெரம்பூர்: கீழ்பாக்கம் கார் டிரைவர் கொலை வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டனர். கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கருணா என்ற கருணாகரன் (26) கார் டிரைவர். இவர் கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில் கீழ்ப்பாக்கம் சன்னியாசிபுரம் மெயின் ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவரை வழிமறித்த 7 பேர் கொண்ட கும்பல் கருணாகரனை சரமாரியாக தாக்கி அவரது தலையில் கல்லை போட்டுவிட்டு தப்பிச் சென்றது. இதில் கருணாகரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக மூளை சிதறி உயிரிழந்தார். இதுகுறித்து தலைமைச் செயலக காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் உயிரிழந்த கருணாகரன், தனது நண்பர்களான தினகரன், அவினாஷ், ராஜேஷ்குமார் ஆகியோருடன் சேர்ந்து கீழ்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த யோவான் என்ற நபரை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெட்டியுள்ளார். இதற்காக தலைமைச் செயலக போலீசார் கருணாகரன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இதற்கு பழிக்குப்பழி வாங்கும் விதமாக, யோவான் உள்ளிட்ட அவரது நண்பர்கள் சேர்ந்து கருணாகரனை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கில் அயனாவரம் புதுநகர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன் (23), மேத்யூ ஜோசப் (24) ஆகிய இருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அயனாவரம் பழனி ஆண்டவர் கோவில் தெருவைச் சேர்ந்த ஆகாஷ் (22), கீழ்ப்பாக்கம் லக்மா நகர் பகுதியைச் சேர்ந்த பப்லு என்ற வசந்த்குமார் (25), அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி தெருவைச் சேர்ந்த அஜித் என்ற முட்டை பஜ்ஜி (23), அயனாவரம் அண்ணா 3வது தெருவைச் சேர்ந்த தீபக் (22) மற்றும் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கீழ்ப்பாக்கம் குட்டியப்பன் தெருவைச் சேர்ந்த யோவான் (21) ஆகிய 5 பேரையும் நேற்று அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமாரின் தனிப்படை உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 2 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த தலைமைச் செயலக காலனி போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

twenty − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi