சென்னை: தமிழக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம், சிறப்பு பொது விநியோகத் திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை நியாய விலைக் கடைகள் மூலம் அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அவற்றை சிலர், முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்படுபவர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ.1,06,20,066 மதிப்புள்ள 3,350 குவிண்டால் ரேஷன் அரிசி, 186 காஸ் சிலிண்டர்கள், 250 கிலோ கோதுமை, 45 கிலோ துவரம் பருப்பு, மண்ணெண்ணெய் 380 லிட்டர், பாமாயிலின் 8 பாக்கெட்டுகள் ஆகியவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 174 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 546 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980ன் கீழ் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொதுமக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.