சென்னை: அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதிகாண் நாள் குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 2021-22ம் ஆண்டுக்கான முதுநிலை மாணவர் சேர்க்கை அறிவிக்கை வெளியிடப் பட்டுள்ளது. அரசு மருத்துவர்களுக்கான 50% சேவை ஒதுக்கீட்டில் சேர்வதற்கான தகுதிகாண் நாள் குறித்த நிபந்தனை இளம் மருத்துவர்களின் உயர்கல்வி வாய்ப்பை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது. நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் தான் கலந்தாய்வு நடைபெறவுள்ளது எனும் நிலையில், அதற்கான சேவை ஒதுக்கீட்டில் இடம் பெறுவதற்கு 2021ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள்ளாக இரு ஆண்டுகள் பணி செய்திருக்க வேண்டும் என்பது நியாயமற்றது. இதனால், இளம் மருத்துவர்கள் முதுநிலை மருத்துவப் படிப்பில் சேவை ஒதுக்கீட்டில் சேரும் வாய்ப்பை இழந்து விடுவர். இது நியாயமல்ல. எனவே, இதை ஒரு சிறப்பு நேர்வாகக் கருதி நடப்பாண்டில் மட்டும் செப்டம்பர் மாதம் வரை இரு ஆண்டுகள் அரசு மருத்துவர் பணியை நிறைவு செய்தவர் சேவை ஒதுக்கீட்டை பெறும் வகையில் அதற்கான தகுதிகாண் தேதியை அரசு மாற்றியமைக்க வேண்டும்….