Sunday, June 16, 2024
Home » 50 சதவீத இடங்களுக்கான கட்டண விவகாரம் தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

50 சதவீத இடங்களுக்கான கட்டண விவகாரம் தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: ஐகோர்ட் உத்தரவு

by kannappan

சென்னை: தனியார் மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில், மருத்துவ படிப்பில் மொத்தமுள்ள இடங்களில் 50 சதவீத இடங்களில் சேர்க்கப்படும் மாணவர்களிடம் அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து  நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, அரசு கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சுயநிதி கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக் கழகங்கள் வசூலிக்க வேண்டும் என்று எப்படி நிர்ப்பந்திக்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மனுதாரர்கள் சார்பில், ஒவ்வொரு மாநிலத்தில் ஒவ்வொரு விதமான கட்டணங்கள் வசூலிக்கப்படும் நிலையில், இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று வாதிடப்பட்டது. ஒன்றிய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர்,  தனியார் மருத்துவ கல்லூரிகள் லாபநோக்குடன் செயல்படக்  கூடாது என்பதை உறுதி செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வாதிட்டார். அப்போது, குறுக்கிட்ட நீதிபதிகள், 50 சதவீத மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்துவிட்டு, மீதமுள்ள 50 சதவீத மாணவர்களுக்கு அதை மானியமாக பயன்படுத்துமாறு கூறுவது எப்படி நியாயமாகும். அதிக கட்டணம் செலுத்த வேண்டிய இடங்களில் போதுமான மாணவர்கள் சேராவிட்டால் என்னவாகும். 50 சதவீத மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளின் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பிப்பதற்கு முன், நிபுணர்கள் குழு இதுகுறித்து ஆய்வு செய்ததா என்று கேள்வி எழுப்பியதுடன் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்….

You may also like

Leave a Comment

4 + ten =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi