பொன்னமராவதி, மார்ச் 15: பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5 வயதை பூர்த்தியடைந்த குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் 5 வயதை பூர்த்தியடைந்த அனைத்து குழந்தைகளையும் கட்டாயம் அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டியது குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.
இதில் பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு கல்வி எனும் வித்து அளிக்க முடியாத சொத்து பள்ளி வயதில் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாதீர்கள் பள்ளிக்கு அனுப்புங்கள் நாடும் வீடும் முன்னேற அடிப்படை தேவை கல்வியே உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஊரின் அனைத்து வீதிகளிலும் பேரணியாக சென்றனர்.இதில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேக்லாமேரி, ஆசிரியர்கள் செல்வி, ஆனந்த அரசி, ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.