Monday, June 3, 2024
Home » 5 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக்குடிநீர் திட்டம்

5 லட்சம் மக்கள் பயன்பெறும் கூட்டுக்குடிநீர் திட்டம்

by Karthik Yash

ராசிபுரம், செப்.2: ராசிபுரத்தில் ₹854.37 கோடி மதிப்பீட்டிலான கூட்டுக் குடிநீர் திட்டப்பணி துவக்க விழா, வரும் 4ம் தேதி நடக்கிறது. இப்பணியை அமைச்சர் நேரு துவக்கி வைத்து, நலஉதவிகளை வழங்க உள்ளதாக ராஜேஸ்குமார் எம்.பி. தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி கோனேரிபட்டியில் நாளை மறுநாள்(4ம் தேதி) நடைபெறும் அரசு விழாவில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு கலந்து கொண்டு, ₹854.37 கோடி மதிப்பீட்டில் ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா முன்னேற்பாடு பணிகளை, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி. நேற்று நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.

பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராசிபுரம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, தமிழக முதல்வர் உத்தரவிட்டு, ₹854.37 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள ராசிபுரம்- இடைப்பாடி கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு சுமார் 45 ஆண்டுகளாகி விட்ட நிலையில், மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வர கோரிக்கை வைக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஆவன செய்துள்ளார். ராசிபுரம் அருகே கோனேரிப்பட்டியில், வரும் 4ம் தேதி காலை 9 மணியளவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு கலந்து கொண்டு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

ராசிபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் வெண்ணந்தூர், அத்தனூர், பிள்ளாநல்லூர், மல்லசமுத்திரம், பட்டணம், புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை மற்றும் சீராப்பள்ளி என 8 பேரூராட்சிகளும், ராசிபுரம் நகராட்சி பகுதியும், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் மற்றும் புதுசத்திரம் என 4 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட 523 குக்கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. இப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். ராசிபுரம் நகராட்சியில் 58 ஆயிரம் பேருக்கும், பேரூராட்சி பகுதியில் 1.16 லட்சம் ேபருக்கும், ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சம் பேருக்கும் என சுமார் 5 லட்சம் பேர் பயன்பெற உள்ளனர்.

கடந்த 50 ஆண்டு கால வரலாற்றில், ராசிபுரம் பகுதியில் இது போன்று ஒரு பெரிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. இத்திட்டத்திற்கு சுமார் 1325 கி.மீ., தூரம் குழாய்கள் பதிக்கின்ற பணி நடைபெறவுள்ளது. அது மட்டுமில்லாமல் குடிநீர் விநியோகம் சீரான முறையில் நடைபெற 86 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், 97 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கப்படவுள்ளன. காவிரி ஆற்றின் கரையில், குதிரைக்கல்மேடு கதவணை-நெரிஞ்சிப்பேட்டை கதவணைக்கு இடைப்பட்ட பகுதியில், நெடுங்குளம் காட்டூர் என்னுமிடத்தில் அமைக்கப்படவுள்ள நீரேற்றும் நிலையத்துடன் கூடிய கிணற்றின் மூலம் தண்ணீர் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கிருந்து இயல்பு நீர் 2.30 கி.மீ தூரத்திற்கு குழாய்கள் மூலம், கரட்டுபுதூர் என்னுமிடத்தில் அமைய உள்ள 76.14 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்பட உள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 43.00 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. அங்கிருந்து 1325.29 கி.மீ., நீளமுள்ள நீருந்து, ஏற்கனவே உள்ள மற்றும் புதிதாக அமைக்கப்படவுள்ள பிரதான தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு, நீர் கொண்டு செல்லப்படுகிறது. பின்னர், ஊராட்சி தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிகளிலிருந்து நீர் உந்து குழாய்கள் மூலம், ஊராட்சிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு நீர் ஏற்றப்பட்டு, சிறப்பான முறையில் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நவம்பர் 2024க்குள் முடிக்கப்படும். இந்தத் திட்டத்தில் ஒரு நபருக்கு தினமும் 55 லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்ய முடியும். இதன்மூலம் ராசிபுரம் பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர், அமைச்சர்கள் நேரு, உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்தார்.

ஆய்வின் போது, நகர்மன்ற தலைவர் கவிதா, ஒன்றியக்குழு தலைவர் ஜெகநாதன், வெண்ணந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் துரைசாமி, திமுக மாவட்ட பொருளாளர் பாலச்சந்திரன், நகர திமுக செயலாளர் சங்கர், விநாயகமூர்த்தி, சிவகுமார், கண்ணன், சத்யசீலன் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன்(சேலம் -நாமக்கல் வட்டம்) மற்றும் செயற்பொறியாளர்கள் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

two × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi