*மயிலாடும்பாறையில் ஆட்டம் ஆடி கிளம்பினர்
காரைக்குடி : பழனி தைப்பூச திருவிழாவுக்கு காரைக்குடியில் இருந்து 450 ஆண்டுகளுக்கு மேலாக பாரம்பரியமாக நகரத்தார்கள், நாட்டார்கள் காவடி ஏந்தி பாதயாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டும் காரைக்குடி, தேவகோட்டை, பள்ளத்தூர், ஆத்தங்குடி, கோனாபட்டு, கானாடுகாத்தான், கண்டனூர் உள்பட 96 ஊர்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டவர்கள் விரதம் இருந்து காவடி எடுத்து நேற்று முன்தினம் குன்றக்குடி வந்தடைந்தனர்.
தொடர்ந்து நேற்று காலை வைரவேல் பூஜை, அரண்மனை பொங்கல் முடித்து சாமியாடி தலைமையில் காவடிகள் புறப்பட்டனர். குன்றக்குடி மயிலாடும் பாறையில் காவடி ஆட்டம் ஆடி பாதயாத்திரையை துவங்கினர். இந்த காவடிகள் தைபூசத்தின் முதல் நாள் வரும் 24ம் தேதி பழனியை சென்றடையும். அங்கு பழனி முருகனுக்கு காவடி செலுத்திவிட்டு மீண்டும் நடைபயணமாகவே நகரத்தார் காவடிகள் ஊர் திரும்புவார்கள்.
அவர்கள் அனைவரும் மீண்டும் குன்றக்குடியில் மீண்டும் ஒன்றுகூடி மகேஸ்வர பூஜை நடத்துவர். அதன் பின்னர் அவரவர் சொந்த ஊருக்கு செல்வார்கள். வழிநெடுகிலும் இந்த காவடி பயணத்தை பக்தர்கள் வரவேற்று பால், பழம், உணவு, குடிநீர் என பல்வேறு பொருட்களை வழங்கினர்.