பெங்களூர்: இந்தியாவில் 19 வயது உட்பட்டவர்களுக்கான நான்கு நாள் டெஸ்ட் போட்டியாக கோச் பெஹார் கோப்பை நடைபெறும். இந்த ஆண்டின் இறுதிப் போட்டியில் கர்நாடகா அணியும் மும்பை அணியும் பலப்பரீட்சை நடத்தின. சிவம்மோஹா நகரில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதில் மும்பை அணியில் ஆயுஸ் என்ற வீரர் 145 ரன்கள் எடுக்க மும்பை அணி 380 ரன்கள் எடுத்தது. இதில் கர்நாடகா பந்துவீச்சு தரப்பில் ஹர்திக் ராஜ் நான்கு விக்கெட்களையும் ராகுல் டிராவிட் மகனான சமித் டிராவிட் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினர். இதனை அடுத்து கர்நாடக அணி முதல் இன்னிங்ஸில் ஆடியது. இதில் கர்நாடகா சார்பில் களமிறங்கிய பிரகார் சத்ருவேதி அபாரமாக விளையாடி ரன்களை குவித்தார். நேற்று முன்தினம் ஆட்டநேர முடிவில் 256 ரன்கள் எடுத்திருந்தார்.
இதனை நேற்றும் தனது ஆட்டத்தை தொடர்ந்த பிரகார் சதுர்வேதி அபாரமாக ஆடினார். 638 பந்துகளை எதிர்கொண்ட பிரகார் 404 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 46 பவுண்டரிகளும், மூன்று சிக்சர்களும் அடங்கும். இதன் மூலம் கர்நாடகா அணி 890 ரன்கள் குவித்து எட்டு விக்கெட்டுகளை மட்டுமே எடுத்து டிக்ளர் செய்தது. மும்பையை விட முதல் இன்னிங்க்ஸில் 510 ரன்கள் கூடுதல் பெற்றதால் கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஒரு தொடரின் இறுதிப் போட்டியில் 400 ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற பெருமையை உலக அளவில் பிரகார் சதுர்வேதி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். பிரகார் சதுரவேதிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மற்றொரு கர்நாடகா வீரரான ஹர்ஷில் தாரமணி 169 ரன்கள் எடுத்தார். இந்த இறுதிப் போட்டியில் டிராவிட் மகனான சமிட் டிராவிட் 22 ரன்கள் எடுத்தார். கர்நாடகா அணியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி ஒன்பது பவுலர்களை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.