காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 டன் அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை மதுவிலக்கு காவல்துறையினர் தீயிட்டு எரித்து அழித்தனர். காஞ்சிபுரம் சரக டிஐஜி பொன்னி அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 12 காவல் நிலையங்களிலும் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் நடமாட்டத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் அடிப்படையில், கடந்த 2021ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் மூலம் 3.228 டன் எடைகொண்ட அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருட்களை மாநகராட்சி குப்பை கிடங்கு அருகே நேற்று தீ வைத்து எரித்து அழித்தனர். இதற்காக காவல் நிலையங்களில் வழக்கு முடிவுற்று இருப்பு வைக்கப்பட்டிருந்த ஹான்ஸ், கூலிப் உள்ளிட்ட போதை பொருட்கள் அந்தந்த காவல் நிலையங்களில் இருந்து எடுத்து வரப்பட்டன. மதுவிலக்கு காவல்துறை டிஎஸ்பி சுரேஷ்குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் அனுராதா, மதுவிலக்கு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் போலீசார் முன்னிலையில் தீயிட்டு கொளுத்தப்பட்டு அதன் பின் மீண்டும் பள்ளத்தினை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் நிரப்பி சமன் செய்தனர்.