புதுடெல்லி: மக்களவைக்கு நடந்த மூன்றாம் கட்ட தேர்தலில் 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது. மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடந்து வருகிறது. கடந்த 7ம் தேதி 11 மாநிலங்கள்,யூனியன் பிரதேசங்களில் 93 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாக்கு பதிவு விவரங்களை வெளியிடுவதில் ஏற்பட்டு வரும் தாமதம் குறித்து டெல்லியில் தேர்தல் ஆணைய அதிகாரிகளை இந்தியா கூட்டணி தலைவர்கள் சந்தித்து புகார் மனு அளித்தனர். இந்நிலையில் 3ம் கட்ட தேர்தல் வாக்கு பதிவு விவரங்களை 4 நாட்களுக்கு பிறகு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
இதில், 65.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,3ம் கட்ட தேர்தலில் மொத்தம் 17.24 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உரிமை பெற்றிருந்தனர். இதில், 66.89 சதவீத ஆண்கள், 64.4 சதவீத பெண்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். 25.2 சதவீத மூன்றாம் பாலினத்தவர்களும் வாக்களித்துள்ளனர்.கடந்த 2019ல் நடந்த தேர்தலில் 68.4 சதவீ தவாக்குகள் பதிவானது என தெரிவித்துள்ளது.