புல்பானி: ஒடிசாவின் கந்தமால் மக்களவை தொகுதிக்குட்பட்ட புல்பானியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘மாநிலத்தின் பெருமை ஆபத்தில் உள்ளது. பாஜ அதனை பாதுகாக்கும். இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடிசா மொழி மற்றும் கலாச்சாரம் அறிந்த மண்ணின் மகன் அல்லது மகள் முதல்வராவார். வாஜ்பாய் தலைமையிலான ஒன்றிய அரசானது மக்கள் நலன்களுக்கான பல்வேறு திட்ட பணிகளை செய்துள்ளது. 26 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் போக்ரான் சோதனை நடத்தப்பட்டு உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பு உயர்த்தப்பட்டது.
மக்களவையில் எதிர்கட்சியாவதற்கு காங்கிரஸ் கட்சியால் 10 சதவீத இடங்களை கூட பெறமுடியாது. காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. 2014ம் ஆண்டு தேர்தலில் இருந்து ஒரே கதையை தான் காங்கிரஸ் கட்சியின் இளவரசர் படித்து வருகிறார். எனது வார்த்தையை குறித்துக்கொள்ளுங்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து சாதனைகளையும் முறியடிக்கும் மற்றும் இந்த முறை 400 தொகுதிகளில் வெற்றி பெறும்” என்றார்.