Thursday, May 16, 2024
Home » ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் தான் அருந்ததியருக்கு 3 சதவீத உள்ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

by Arun Kumar

புதுடெல்லி: ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் தான் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள்ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது.என தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.எஸ்.சி எஸ்.டி இடஒதுக்கீடு விவகாரத்தில் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தரப்பு உள்பட 23 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவற்றை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இந்த வழக்கில் அருந்ததியருக்கு மூன்று சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தமிழ்நாடு வழக்கும் இணைப்பில் உள்ளது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே,‘‘ஜனநாயக அமைப்பின் அடிப்படையில் தான் அருந்ததியருக்கு மூன்று சதவீத உள்ஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டு எஸ்சி பிரிவினருக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து அருந்ததியருக்கு மூன்று சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 2008 நவம்பர் 27ம் தேதி எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவின்படி, சட்டம் இயற்றப்பட்டு, 2009ம் ஆண்டு ஏப்ரல் 29ல் விதிகள் உருவாக்கப்பட்டன.

இதுகுறித்த அனைத்து தரவுகளையும் ஓய்வு நீதிபதி ஜெனார்த்தனன் விரிவாக ஆய்வு செய்துள்ளார். குறிப்பாக விதிகளின் முறைப்படி தான் சட்டப்பேரவையில் இந்த விவகாரத்தில் முடிவு மேற்கொள்ளப்பட்டது என்பதை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். சட்டப்பிரிவு 341ன் கீழ் பட்டியலில் ஒரு ஜாதி சேர்க்கப்பட்டவுடன், சமூகத்தின் கீழ்நிலைப் பிரிவினருக்கு உதவும் வகையில், பட்டியல் சாதிகளுக்குள் துணை வகைப்பாட்டை அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற அரசுக்கு தனி அதிகாரம் உள்ளது என்று வாதாடினார்.

You may also like

Leave a Comment

13 + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi