இடைப்பாடி: 3 மகன்களுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், இடைப்பாடி நகராட்சியில் உள்ள சின்னமணலியைச் சேர்ந்தவர் அருள். இவரது மனைவி தேனாம்பாள் (27). இவர்களுக்கு நிதிஷ்குமார் (9), சித்ரு (7), புகழ்மதி(3) என்ற மகன்கள் உள்ளனர். அருளுக்கு குடிப்பழக்கம் உள்ளதால், தினமும் மது அருந்தி விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், வீட்டின் தேவைகளுக்கு பணம் தராததால், குடும்பம் நடத்த முடியாமல் தேனாம்பாள் சிரமத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன், அருள் குடித்துவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்துவிட்டு, வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வராததால், மன உளைச்சலில் இருந்த தேனாம்பாள் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து, நேற்று கடைக்கு சென்று எலிமருந்தை வாங்கி வந்து, குளிர்பானத்தில் கலந்து தானும் குடித்து விட்டு, தனது மகன்கள் 3 பேருக்கும் கொடுத்துள்ளார். கூல்டிரிங்சை குடித்து விட்டு வீட்டில் மயங்கியவர்களை மீட்ட அக்கம் பக்கத்தினர், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இடைப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 4 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில், 4 பேரும் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து இடைப்பாடி இன்ஸ்பெக்டர் சந்திரலேகா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
3 மகன்களுக்கு விஷம் கொடுத்து இளம்பெண் தற்கொலை முயற்சி
previous post