Wednesday, June 12, 2024
Home » அதிமுக ஆட்சியில் இல்லாத பால் பண்ணைக்கு 38 பேர் நியமனம்: தேனி ஆவின் நிர்வாக குழு கலைப்பு; ஓபிஎஸ் தம்பி, 16 பேர் பதவி பறிப்பு

அதிமுக ஆட்சியில் இல்லாத பால் பண்ணைக்கு 38 பேர் நியமனம்: தேனி ஆவின் நிர்வாக குழு கலைப்பு; ஓபிஎஸ் தம்பி, 16 பேர் பதவி பறிப்பு

by Neethimaan

தேனி: முறைகேடு புகாரால் தேனி ஆவின் நிர்வாக குழு கலைக்கப்பட்டது. ஓபிஎஸ் தம்பி ஓ.ராஜா உள்ளிட்ட 17 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன. தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர் சங்கங்களை ஒருங்கிணைத்து ஆவின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் ஆவினில் பல்வேறு பகுதிகளிலும் பால் மற்றும் நெய், வெண்ணெய், மைசூர்பாகு உள்ளிட்ட உப பொருட்கள் விற்பனையிலும், ஆவின் மேலாளர், அலுவலக உதவியாளர், டிரைவர் உள்ளிட்ட பல்வேறு பணி நியமனங்களிலும் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் 201 பேர் அதிரடியாக நீக்கப்பட்டனர். 26 ஆவின் அதிகாரிகள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த வாரம் விருதுநகர் ஆவின் நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு, ஆவின் செயலராக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் நியமிக்கப்பட்டார். இதன்தொடர்ச்சியாக தேனி ஆவினிலும் முறைகேடு அரங்கேறி, தற்போது நிர்வாகக்குழு கலைக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் ஆவின் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019ல் மதுரை மாவட்டத்தில் இருந்து பிரிந்து, தேனியை தலைமையிடமாகக் கொண்டு ஆவின் உருவானது. இதில் மாவட்ட அளவில் மொத்தமுள்ள 400க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர் சங்கங்களை உள்ளடக்கிய 17 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதன் தலைவராக ஓ.ராஜா தேர்வானார். இவருக்கு ஆதரவாக அதிகாரிகளும் செயல்பட்டனர்.

இதையடுத்து தேனி ஆவினில் உற்பத்தி பொருட்களிலும் பல்வேறு முறைகேடுகள் நடந்தது. நிர்வாக ரீதியாக ஒதுக்கப்பட்ட நிதியிலும் கையாடல் நடந்து உள்ளது. இந்நிலையில், தேனி மாவட்ட ஆவினில் பண்ணையே இல்லாத நிலையில், கடந்த 2021ம் ஆண்டு ஆவினில் மேலாளர்கள், துணை மேலாளர்கள், மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ், டெக்னீசியன்கள், டிரைவர்கள், அலுவலக உதவியாளர்கள் என 38 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர். மேற்கண்ட பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக தேனி பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிர்வாக இயக்குநர் சுப்பையாவிற்கு புகார்கள் அனுப்பினர். விசாரணையில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது.

இந்நிலையில், பால் வளத்துறை ஆணையர் தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக் குழுவை கடந்த மார்ச் 31ம் தேதி கலைத்து உத்தரவிட்டார். இதன் மூலம் ஓ.ராஜா தலைமையிலான 17 பேரின் பதவிகள் பறிக்கப்பட்டன. இதையடுத்து, தேனி மாவட்ட ஆவின் செயலராக தேனி மாவட்ட கலெக்டர் சஜீவனாவை நியமித்து பால்வளத் துறை ஆணையர் உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

sixteen + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi