கான்குயூரோஸ்: போர்ச்சுக்கல் நாட்டில் உலகின் மிக வயதான நாய் தனது 31வது பிறந்தநாளை கொண்டாடி கின்னஸ் சாதனை படைத்தது. போர்ச்சுகீசிய நாட்டில் உள்ள ரபீரோ டோ அலென்டெஜோ என்ற இனத்தை சேர்ந்த ‘போபி’ என்ற பெயர் கொண்ட நாய் உலகிலேயே மிகவும் வயதான நாயாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நாய் போர்ச்சுகீசிய கிராமமான கான்குயூரோஸில் உள்ள அதன் உரிமையாளர் லியோனல் கோஸ்டா என்பவரது வீட்டில் வளர்ந்து வருகிறது. இந்த நாய்க்கு கடந்த சனிக்கிழமை 31வது பிறந்தநாள். இதை முன்னிட்டு உரிமையாளர் லியோனல் பிரமாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்தார். போர்ச்சுக்கீசிய பாரம்பரியப்படி நடந்த இந்த விழாவில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் உள்ளூர் இறைச்சிகள் மற்றும் மீன்கள் விருந்தினர்களுக்கு வழங்கப்பட்டது. மனிதர்கள் சாப்பிடும் உணவை மட்டும் உண்ணும் போபிக்கு இந்த விழாவில் கூடுதல் உணவு வழங்கப்பட்டது. மேலும் போபியை மகிழ்விக்க நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதில் போபி பங்கேற்று நடனம் ஆடியது.
லினோல் பல நாய்களை வளர்த்து வந்தார். போபியின் தாயார் கிரா, 18 வயது வரை வாழ்ந்தது. ஆனால் போபி 31 வயதை எட்டியுள்ளது. 1992ல் போபியை ஆய்வு செய்த கால்நடை மருத்துவ டாக்டர்களால் அதன் பிறந்த தேதி பதிவு செய்யப்பட்டது.இதன் மூலம் உலகின் வயதான நாய் என்ற பெயரை போபி பதிவு செய்து கொண்டுள்ளது.