சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரை அதாவது தொடர்ச்சியாக 31 மணி நேரம் நடந்த ஊரடங்கால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து சாலைகளும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அதேபோல மார்க்கெட், பெட்டி கடைகள், டீ கடைகள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது, மேலும், ஊரடங்கு தளர்வில் அரசு அனுமதிக்கப்பட்ட வாகனங்களை தவிர மற்ற வாகனங்களை போலீசார் வந்த வழியே திருப்பி அனுப்பினர். தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி இரவு முதல் நேற்று அதிகாலை 5 மணி வரை 31 மணிநேர ஊரடங்கு பிறப்பித்தது. மேலும், ஞாயிற்றுகிழமை முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 6ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ஞாயிற்று கிழமை தவிர மற்ற நாட்களில் அரசு அனுமதி அளித்த மாநிலத்திற்குள் பொது மற்றும் தனியார் பேருந்துகள் போக்குவரத்து, அத்தியாவசிய பணிகளாக தினசரி பத்திரிகை, பால் விநியோகம், மருத்துவ பரிசோதனை கூடங்கள், ஆம்புலன்ஸ் சேவை சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் மட்டும் ஊரடங்கின் போது அனுமதிக்கப்பட்டது. ஊரங்கு பிறப்பிக்கப்பட்ட முதல் நாளான நேற்று அரசு விதிமுறைகளை முறையாக போலீசார் நடைமுறைப்படுத்தினர். பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்தியாவசிய வாகனங்கள், பால் விநியோகம், தினசரி பத்திரிக்கை, மருத்துவமனைக்கு செல்வோருக்கு மட்டும் போலீசார் அனுமதி வழங்கினர். தொழிற்சாலை வேலைக்கு சென்றவர்களை அவர்களின் அடையாள அட்டைகளை பரிசோதனை செய்தும், விமான நிலையம், ரயில் நிலையத்துக்கு வாகனங்களில் சென்றவர்களை போலீசார் வழிமறித்து அவர்கள் கொண்டு வந்த டிக்கெட்டுகளை பரிசோதனை செய்த பிறகே அனுமதி வழங்கினர். மற்றவர்களை திருப்பி அனுப்பினர்.இதுபோல், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, வேளாங்கண்ணி, திருப்பூர், சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் என தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. வழக்கமாக நடைபெறும் மார்க்கெட், டீக்கடைகள், பெட்டிக் கடைகள், வார சந்தைகள், பூ, காய்கறிகள், பழ மார்க்கெட்டுகள் என அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாநிலம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. வழக்கமாக கூட்டம் அதிகம் கூடும் இடங்களை டிரோன் மூலம் கண்காணித்தனர். அதேபோல் ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டிருந்தது. அதை போலீசார் உறுதிப்படுத்தி கண்காணித்தனர். முழு ஊரடங்கு என்பதால் நேற்று தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் அனைத்தும் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்களும் தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கிற்கு முழு ஆதரவு அளித்து அவரவர் வீடுகளிலேயே முடங்கினர். சென்னையை பொறுத்தவரை, சென்னை மாநகர போலீஸ் சார்பில் 312 இடங்களில் வாகன சோதனை சாவடிகள், தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் 32 இடங்களில் வாகன சோதனை சாவடிகள், ஆவடி காவல் ஆணையரங்கம் சார்பில் 109 என மொத்தம் சென்னை முழுவதும் 457 சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த பணிகளில் சுழற்சி முறையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று நடந்த முழு ஊரடங்கு அமலில் ரயில் மற்றும் விமானம் மூலம் வெளியூர் செல்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பொதுமக்கள், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு ஆட்டோவில் செல்ல முன்பதிவு டிக்கெட்டு நகல் வைத்துள்ளார்களா என்றும், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் காண்பிக்கும் டிக்கெட் நகலினை சோதனை செய்யும்போது, அதில் குறிப்பிட்டிருக்கும் தேதி, நேரம் மற்றும் வழித்தடங்களை ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே ஆட்டோ அல்லது டாக்சி செல்ல அனுமதித்தனர். 31 மணி நேரம் நடந்த முழு ஊரடங்கை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.மாநகர போலீஸ் அதிரடி நடவடிக்கையால் நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை 5மணி வரை மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, வடபழனி 100 அடி சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் நெடுஞ்சாலைகள் என அனைத்து சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது. மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள், பூங்காக்கள், மீன் மார்க்கெட்டுகள், கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. முழு ஊரடங்கின் போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் பயணம் செய்த நபர்களிடம் என்ன தேவைக்கு செல்கிறீர்கள் என்றும், அடையாள அட்டையை பரிசோதனை செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதி அளித்தனர். முதன்மை சாலைகள் மற்றும் அனைத்து மேம்பாலங்களையும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு, அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டும் அனுமதித்தனர். தடையை மீறியும் வாகனங்களில் சுற்றிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். 31 மணி நேரம் நடந்த முழு ஊரடங்கால் சென்னை மாநகரமே ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. * பொதுமக்களும் தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கிற்கு முழு ஆதரவு அளித்து அவரவர் வீடுகளிலேயே முடங்கினர்.* கடற்கரைகள், பூங்காக்கள், மீன் மார்க்கெட்டுகள், கோயம்பேடு மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது….