வாஷிங்டன் : 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவம் மற்றும் இதர உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கான மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோபிடன், அமெரிக்க பிரதிநிதிகள் சபையிடம், உக்ரைனை ஆதரிப்பதற்காக 30 பில்லியன் டாலர் கேட்டு இருந்தார். அத்துடன், ரஷ்யாவின் மீது பொருளாதார தடைகள் மற்றும் ரஷ்யாவின் சொத்துக்களை பறிப்பதற்கான புதிய சட்ட விதிமுறைகளையும் கேட்டு இருந்தார். இந்த நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் உக்ரைனுக்கு 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்டரஸ், உக்ரைன் தலைநகர் கீவில் நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு தென் கிழக்கு உக்ரைன் நகரமான மரியுப்போலில் போராளிகளும் பொதுமக்களும் பதுங்கி இருக்கும் எகு ஆலையை விட்டு அவர்களை வெளியேற்றுவதற்கான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறினார். தலைநகர் கீவ் அருகே புச்சா நகரில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட இடத்தை அவர் பார்வையிட்டார். உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை 2 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து வருகிறது. இந்த போர் நடவடிக்கையால் ஏராளமான மக்கள் உக்ரைனை விட்டு வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்தனர். …