திருவண்ணாமலை, மார்ச் 15: திருவண்ணாமலையில் ஆணி படுக்கையில் படுத்து 30 நிமிடங்கள் யோகாசனம் செய்து சித்த மருத்துவர் உலக சாதனை முயற்சியை மேற்கொண்டார். திருவண்ணாமலை புதிய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில், தொண்டு அமைப்பு சார்பில் யோகாசன நிகழ்ச்சி நடந்தது. உலக நன்மைக்காகவும், பெண்களுக்கான விழிப்புணர்வு, நூறு சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு வலியுறுத்தி இந்த யோகாசன நிகழ்ச்சி நடந்தது. அதில், சித்த மருத்துவர் ஹரிகோவிந்தன் மற்றும் ஆன்மிக தொண்டு நிறுவன நிர்வாகிகள் மற்றும் யோகாசன பயிற்சியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்ேபாது, திருவண்ணாமலையை சேர்ந்த சித்த மருத்துவர் யமுனா ஹரிகோவிந்தன்(35), ஆணி படுக்கையில் சுமார் 30 நிமிடம் படுத்தபடி சாந்தி ஆசனம் செய்து உலக சாதனை முயற்சி மேற்கொண்டார். இவர், ஏற்கனவே பல்வேறு யோகாசன நிகழ்ச்சிகளை நடத்தி சாதனை முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டது. யோகாசன நிகழ்ச்சியில், அவரது கணவர் ஹரிகோவிந்தன், மகன்கள் அனிஷ், தர்ஷன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு யோகாசனங்களை செய்தனர். தொடர்ந்து, யோகாசன சாதனை முயறசியில் ஈடுபட்ட யமுனா ஹரிகோவிந்தனுக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.