Wednesday, June 12, 2024
Home » 3 நாளில் தக்காளி விலை 2 மடங்கு உயர்வு-கிலோ ரூ.50-க்கு விற்பனை; மக்கள் அதிர்ச்சி

3 நாளில் தக்காளி விலை 2 மடங்கு உயர்வு-கிலோ ரூ.50-க்கு விற்பனை; மக்கள் அதிர்ச்சி

by kannappan

கோவை : கோவை மேட்டுப்பாளையம் சாலையில் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு கர்நாடகா, ஆந்திரா பகுதியில் இருந்து தக்காளி வரத்து உள்ளது. தவிர, தொண்டாமுத்தூர், மதுக்கரை, பாலத்துறை, நாச்சிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையும் தக்காளி கோவை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.இந்த தக்காளியை சில்லரை வியாபாரிகள் வாங்கி கடைகளில் விற்பனை செய்கின்றனர். இந்த மார்க்கெட்டில் 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வரை ரூ.450 முதல் ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்ட பெட்டி, நேற்று ரூ.900 முதல் ரூ.1,000க்கு விற்பனையானது. இதனால், கடைகளில் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது கிலோ ரூ.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சில இடங்களில் ரூ.60க்கு விற்பனை செய்கின்றனர். பருவமழையின் காரணமாக தக்காளி வரத்து குறைவாக இருப்பதாகவும், இதனால் தக்காளியின் விலை அதிகரித்து உள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். விநாயகர் சதுர்த்தி, முகூர்த்த தினங்கள், ஓணம் பண்டிகை காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கு அதிகளவில் தேவை ஏற்பட்டுள்ளது. ஆனால், மழையால் காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. எனவே, தொடர்ந்து விலை அதிகரித்து வருகிறது.குறிப்பாக, தக்காளி பயிரிடப்பட்ட இடங்களில் அதிகளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான தக்காளிகள் டன் கணக்கில் அழுகியுள்ளது. விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால், வெளிமாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து கோவைக்கு மிக குறைவான அளவில் தக்காளி வரத்து இருக்கிறது. இதனால், விலை ஏற்றம் காணப்படுகிறது. இந்த திடீர் விலை உயர்வால் வியாபாரிகள், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து எம்.ஜி.ஆர் மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:மழையால் தக்காளி வரத்து குறைந்துள்ளது. கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிற்கு பொதுவாக 20 முதல் 30 வண்டிகளில் தக்காளி வரும். ஒரு வண்டியில், 400 பெட்டிகள் இருக்கும். ஆனால், தற்போது 10-க்கும் குறைவான வண்டிகள் தான் வருகிறது. இதில், ஓணம் பண்டிகையால் கேரளாவிற்கு 5 வண்டிகள் சென்று விடுகின்றன. மூன்று நாட்களில் ஒரு பெட்டிக்கு ரூ.150 வரை விலை அதிகரித்துள்ளது. நாட்டு தக்காளி பெட்டி ரூ.850 முதல் ரூ.900க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு தீபாவளி வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் தொடர்ந்து வரவுள்ள பண்டிகைகள் மற்றும் முகூர்த்த தினங்கள் தான் காரணம். வரத்து குறைவாக இருப்பதால், விலை தொடர்ந்து ஏறும் நிலையுள்ளது. அடுத்த சில நாட்களில் தக்காளியின் விலை மேலும் உயர வாய்ப்புகள் உள்ளன.தவிர, கேரட், பீன்ஸ், உருளைகிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும், கோவை டி.கே மார்க்கெட்டிற்கு பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தக்காளி விற்பனைக்கு வரும். ஆனால், மழை காரணமாக வரத்து குறைந்து விட்டது. மேலும், பூலுவப்பட்டி, கிணத்துக்கடவு பகுதியில் இருந்து மட்டும் தக்காளி வரத்து உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.குப்பைக்கு போன தக்காளிகோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு தக்காளி வரத்து அதிகரித்து இருந்தது. அப்போது, ஒரு கிலோ ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டது. தக்காளி வாங்க ஆட்கள் இல்லை. இதனால், பல கிலோ தக்காளி விற்பனையாகாமல் இருந்தது. இதனை வியாபாரிகள் மார்க்கெட்டின் ஒரே இடத்தில் குவித்து வைத்திருந்தனர். இதனை மாநகராட்சி வாகனத்தில் எடுத்து குப்பை கிடங்கில் கொண்டு சென்று கொட்டினர். இதேபோல், கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டிலும் தரையில் வீணாக தக்காளியை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கொட்டிவிட்டு சென்றனர். இதனை பலர் இலவசமாக எடுத்து சென்றனர்….

You may also like

Leave a Comment

6 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi