வேலூர், மார்ச் 20: 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் தொடக்கக்கல்வி மாணவர்கள் 3ம் பருவத்தேர்வு எழுதுவதற்கான வினாத்தாள் வழங்குவதற்கான செலவின நிதி ₹2.43 கோடியை விடுவித்து தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு 26ம் தேதி தொடங்குகிறது. இத்தேர்வுகள் முடிந்த பின்னர் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் 3ம் பருவத்தேர்வு நடக்கிறது. இதில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 3ம் பருவத்தேர்வுக்கான வினாத்தாள்களை ‘பிஇஓ’ லாகின் மூலம் வட்டார கல்வி அலுவலர் பதிவிறக்கம் செய்து, அந்தந்த வட்டார வள மையங்களுக்கு அனுப்பி வட்டார வளமைய மேற்பார்வையாளர் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம், அந்தந்த வட்டாரங்களில் அடங்கிய தொடக்கப்பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பிரதி எடுத்து வழங்கும் பணி நடக்க உள்ளது.
இதற்கான செலவின தொகையாக ₹2 கோடியே 43 லட்சத்து 60 ஆயிரத்து 453ஐ ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பிரித்து வழங்கும் வகையில் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு பெறப்படும் தொகையினை வட்டார வளமையத்தில் நகலெடுப்பதற்கான வினாத்தாள்களின் எண்ணிக்கை வினாத்தாள்களின் பக்க எண்ணிக்கை மற்றும் மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப வட்டார வளமையம் வாரியாக சம்பந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலருக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள வழிகாட்டுதல்படி வழங்கப்பட வேண்டும் என்று தொடக்கக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.