தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்த இரண்டு யானைகளை, வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த தளி மற்றும் ஜவளகிரி வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் முகாமிட்டு சுற்றித்திரிகின்றன. இந்த யானைகள் கூட்டத்தில் இருந்து பிரிந்த 2 யானைகள் அருகேயுள்ள நெல்லுமார் என்ற கிராமத்துக்குள், நேற்று முன்தினம் நுழைந்துள்ளது. பின்னர், கிராம பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டிருந்த ராகி, தக்காளி உள்ளிட்ட விளை பயிர்களை 2 காட்டு யானைகளும் சேதப்படுத்தியது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள், ஜவளகிரி வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், அப்பகுதிக்கு சென்று பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர், 2 யானைகளையும் வனத்துறையினர் அடர்ந்த ஜவளகிரி வனபகுதிக்கு விரட்டி அடித்தனர். இதனால் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.