திருப்பூர்: பல்லடம் அருகே முன்விரோதம் காரணமாக தனியார் டிவி செய்தியாளரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், சிலரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காமநாயக்கன்பாளையம் கே.கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் நேச பிரபு (29). இவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள கே.கிருஷ்ணாபுரம் பிரிவு பகுதியில் உள்ள தனது தோட்டத்து வீட்டில் இருந்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் நோட்டமிடுவதை பார்த்த அவர், அந்த பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கிற்கு வந்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு போனில் தகவல் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் தன்னை அரிவாளால் வெட்டுவதற்காக வாகனங்களில் வருவதை பார்த்த நேச பிரபு பெட்ரோல் பங்க் அலுவலகத்திற்குள் சென்றுள்ளார். நேச பிரபுவை துரத்தி சென்று மர்மநபர்கள் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில், கை, கழுத்து தோள்பட்டையில் காயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காமநாயக்கன்பாளையம் போலீசார், நேச பிரபுவை மீட்டு மேல்சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 4 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த பிரவீன் (27), திருப்பூர் கே.வி.ஆர்.நகரை சேர்ந்த சரவணன் (23) ஆகியோரை கைது செய்தனர். இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘திருப்பூர் வீரபாண்டி அய்யம்பாளையம் பகுதியில் பாலியல் தொழில் நடந்து வந்ததாக தெரிகிறது. இதையடுத்து அங்கு நேச பிரபு செய்தி சேகரிக்க சென்றபோது அங்கிருந்த சபரி விஜய் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்தும் இருக்கும்’ என்று தெரியவந்துள்ளது.