திருவொற்றியூர்: நிர்பயா நிதியுதவி திட்டத்தில் சென்னை மாநகர காவல்துறை வடசென்னை பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்களை தனியார் நிறுவனம் மூலம் பொருத்தி அதற்கு இணைப்பு கொடுத்து வருகிறது. இந்நிலையில் மாதவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் யுபிஎஸ் பேட்டரிகள் காணாமல் போனது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவன அதிகாரி தீபன் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மாதவரம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயப்பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தின் அருகில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினார். இதில், வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த சரத்குமார் (18), நவீன் (18) ஆகிய இருவரையும் நேற்று பிடித்து விசாரித்தபோது, சிசிடிவி கேமரா பேட்டரிகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இருவரும் ஏற்கனவே அந்த நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 6 பேட்டரிகள், 2 பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.