சென்னை: சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள மூர் மார்க்கெட் பகுதியில் இரவு நேரங்களில் அதிகளவில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், மூர் மார்க்கெட் பகுதியில் நேற்று முன்தினம் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது 2 வடமாநில வாலிபர்கள் சந்தேகத்திற்கு இடமான வகையில் கையில் பையுடன், மார்க்கெட் பகுதியில் அங்கும் இங்கும் சுற்றி வந்துள்ளனர்.
இதை கவனித்த மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார், அந்த 2 வாலிபர்களை பிடித்து, அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்த போது, அதில் 16.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுபாஷிண் பெஹ்ரா (28), கேரள மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் (42) என தெரியவந்தது. இருவரும் ஒடிசா மாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 16.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.