கரூர், மார்ச் 5: கரூர் அரசு கலைக்கல்லூரியில் அறக்கட்டளைப் பரிசளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்குக் கல்லூரி முதல்வர் அலெக்சாண்டர் தலைமையேற்றார். 2020 – 2021, 2021 – 2022 மற்றும் 2022- 23ம் கல்வி ஆண்டிற்கான பரிசுத்தொகை சிறந்த மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. விழாவில் மாணாக்கர்களின் கல்வி தனிதிறன் சிறந்த நூலகப் பயன்பாட்டாளர் மற்றும் மாநில அளவில் பங்குகொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவ மாணவியர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அறக்கட்டளையின் உறுப்பினர்களாகக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் கொடையாளர்களும் செயல்பட்டுவருகின்றனர். இந்த கல்விச் சேவைக்கான அறக்கட்டளையில் 44 நபர்கள் வழங்கிய நன்கொடையில் கிடைக்கப்பெற்ற வட்டி வருவாய் பரிசாக வழங்கப்படுகிறது . 13,14 மற்றும் 15வது அறக்கட்டளைப் பரிசளிப்பு விழாவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற மாணவ மாணவியர்கள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப்பாடங்களில் கல்லூரி அளவில் முதல் மதிப்பெண் பெற்றவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்கள் மாற்றுத்திறனாளிகளில் முதன்மையானோர் மற்றும் சிறந்த நூலகப் பயன்பாட்டாளர் என பல்வேறு நிலைகளில் சிறப்புப் பெற்றவர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
அறக்கட்டளைப் பரிசளிப்பு விழாவில் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் வரவேற்றார். முனைவர் சரவணன் ஆண்டறிக்கை வாசித்தார். அறக்கட்டளைக் கொடையாளர்களான முன்னாள் நகர்மன்றத் தலைவர் ரவி, குணசேகரன், அட்வகேட் பொன்னுசாமி மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் வாழ்த்தி பேசினார். முனைவர் குணசேகரன் நன்றி கூறினார். கல்லூரியில் பணியாற்றும் அனைத்துத்துறைப் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகப் பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் பரிசளிப்பு விழாவில் பங்கேற்றனர்.