சென்னை, ஏப்.13: தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் ‘ஜலானி’ என்ற பெயரில் மொத்த வெள்ளி விற்பனை கடை உள்ளது. இந்த கடையின் உரிமையாளர் ஜலானி, கடந்த 10ம் தேதி பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், தனது கடையில் உள்ள ₹1.80 கோடி மதிப்புள்ள 222 கிலோ வெள்ளி மாயமானது. கடையில் பணியாற்றும் சரவணன் (44), அஜ்மல் (44), மகேந்திரன் (34), வினோத் (22), பிங்கேஷ் (43), மதன் (24) ஆகிய 6 ஊழியர்கள் மீது சந்தேகம் உள்ளது, என தெரிவித்து இருந்தார். அதன்பேரில், போலீசார் 6 பேரை விசாரணை நடத்திய போது, அதில் ஊழியர் சரவணன் தனது நண்பர்களுடன் இணைந்து 222 கிலோ வெள்ளியை திருடி விற்றது தெரியவந்தது. அவரிடம் இருந்து 15 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. மீதமுள்ள வெள்ளியை மீட்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.