சென்னை: அதிமுக ஆட்சியில் 2017 பிப்ரவரி 18ம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அப்போது, திமுக எம்.எல்.ஏ.,க்கள் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்று வலியுறுத்தி பேரவைக்குள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். பின்னர் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்து. அதில் எடப்பாடி அரசு வெற்றிபெற்றதாக சபாநாயகர் அறிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றபட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தியது சட்டவிரோதம் என்றும், இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என்று அறிவிக்க கோரியும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போது இந்த வழக்கை விசாரிப்பதால் எந்த பயனும் இல்லை. மனுதாரர் கோரிய நிவாரணத்தை வழங்க இயலாது எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.