Monday, May 20, 2024
Home » 2014 முதல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 8 ஆண்டில் எதிர்கட்சி ஆண்ட மாநிலங்களில் நடந்தது என்ன? 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல்

2014 முதல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் 8 ஆண்டில் எதிர்கட்சி ஆண்ட மாநிலங்களில் நடந்தது என்ன? 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல்

by kannappan

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் முடிந்த நிலையில் எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்து பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. வரும் 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பல மாநிலங்களில் பேரவை தேர்தல் நடப்பதால் பாஜக தனது வியூகங்களை வகுத்து வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், நாட்டின் தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குறியாகி வருகிறது. கடந்த 2014, 2019ம் ஆண்டுகளில் மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேலைகளை தீவிரமாக செய்யத் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னதாக எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களில் சிபிஐ, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகளை நடத்தி அச்சுறுத்தி வருவதாக எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. மாநிலங்களில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்பையும் மீறி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கைப்பற்றும் வேலைகளை செய்து வருகிறது. ஏற்கனவே கடந்த எட்டு ஆண்டுகால ஆட்சியில் எட்டு மாநிலங்களில் தேர்வு செய்யப்பட்ட அரசை குறுக்குவழியில் கைபற்றி ஆட்சியை நடத்தி வருகிறது. தற்போது அந்த வரிசையில் டெல்லி மற்றும் ஜார்கண்ட் மாநில அரசுகள் சிக்கியுள்ளன. கடந்த காலத்தில் பாஜக நடத்திய ஆட்சி கவிழ்ப்பு விபரங்கள் ஊடங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. அதன்விபரம் வருமாறு: அருணாச்சல பிரதேசம்கடந்த 2016ம் ஆண்டில், காங்கிரஸ் முதல்வர் பெமா காண்டுவுக்கு எதிராக 40 அதிருப்தி எம்எல்ஏக்களை உருவாக்கி, அருணாச்சல பிரதேச மக்கள் கட்சியுடன் இணைந்து பாஜக ஆட்சியை பிடித்தது. கர்நாடகாகடந்த 2019ம் ஆண்டில் மதசார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்த நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் குமாரசாமி மாநில முதல்வரானார். ஆளும் கூட்டணி கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்கள் 16 பேரை வளைத்து போட்டு ஆட்சியை பாஜக கைப்பற்றியது. மத்திய பிரதேசம் கடந்த 2018ல் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி 121 எம்எல்ஏக்களுடன் ஆட்சியைப் பிடித்தது. கமல்நாத் மாநில முதல்வரானார். ஆனால், காங்கிரஸ் இளம் தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியாவை பாஜக தங்களது கைக்குள் போட்டுக் கொண்டது. பின்னர் காங்கிரசின் 26 அதிருப்தி எம்எல்ஏக்கள் துணையுடன் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. கோவாகடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி 17 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜக 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சிலரை வளைத்து போட்டு, சில உதிரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை பாஜக கைப்பற்றியது. மணிப்பூர்கடந்த 2017ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 27 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால், 21 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, ஒன்பது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தங்களது வலையில் விழவைத்து ஆட்சியை கைப்பற்றியது. சிக்கிம்சிக்கிமில் பாஜகவுக்கு ஒரு இடம் எம்எல்ஏ கூட இல்லாத நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் (எஸ்டிஎஃப்) 12 எம்எல்ஏக்களையும் பாஜகவில் இழுத்து போட்டு, ஆட்சியை கைப்பற்றியது. புதுச்சேரிபுதுச்சேரியில் சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்ததன் மூலம், அங்கும் பாஜக ஆட்சி நடக்கிறது. மகாராஷ்டிராசிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சிவசேனாவின் அதிருப்தி தலைவர் ஏக்நாத் ஷிண்டேவுடன் சேர்ந்து 40 சிவசேனா எம்எல்ஏக்களை இழுத்து போட்டு, உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணி அரசை கவிழ்த்தது. பீகார்கடந்த 2015ல் நிதிஷ் குமார் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. ஆனால், நிதிஷ் குமாருடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சியை கைப்பற்றியது. நிதிஷ் குமார் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்த முயன்ற நிலையில், அந்த திட்டம் ேதால்வியில் முடிந்தது. அதனால் ரிவர்ஸ் கியர் போட்ட நிதிஷ் குமார், பழைய நண்பர்களான ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் – இடதுசாரிகளுடன் இணைந்து தற்போது ஆட்சி நடத்தி வருகிறார். டெல்லிஆம் ஆத்மி தலைவரான டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், இரண்டு அமைச்சர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. ஒருவர் சிறையில் உள்ளார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் உள்ளார். ஆம்ஆத்மி எம்எல்ஏக்களுக்கு தலா 20 கோடி ரூபாய் கொடுத்து அவர்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டி உள்ளது. ஜார்கண்ட்முதல்வர் ஹேமந்த் சோரன் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கடந்த நான்கு மாதங்களாக அமலாக்கத்துறை அடுத்தடுத்த சோதனைகளை நடத்தியது. சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள ஹேமந்த் சோரன், தற்போது தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதற்காக தங்களது கட்சி எம்எல்ஏக்களை அழைத்துக் கொண்டு ஓட்டலில் தங்கவைத்துள்ளார். இங்கு என்ன மாதிரியான அரசியல் மாற்றம் நடக்கப் போகிறது என்பது பரபரப்பாக பேசப்படுகிறது. மேற்குவங்கம்மேற்குவங்கத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய முதல்வர் மம்தா பானர்ஜியின் அரசுக்கு பல வகையிலும் ெநருக்கடிகளை கொடுத்து வந்த அப்போதைய ஆளுநர் ஜக்தீப் தன்கர், தற்போது துணை குடியரசு தலைவராகி விட்டார். தற்போது அங்கு புதிய ஆளுநர் இன்னும் நியமிக்கவில்லை. ஏற்கனவே மம்தாவின் அண்ணன் மகன் அபிஷேக், அவரது மனைவி உட்பட ஆளும்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் மீது மத்திய புலனாய்வு அமைப்புகள் பல கட்ட சோதனைகளை நடத்தி வருகின்றன. ராஜஸ்தான்ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்துவிட பாஜக எவ்வளவோ முயற்சி செய்தது. அதற்காக காங்கிரஸ் இளம்தலைவர் சச்சின் பைலட்டை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் அத்திட்டம் தோல்வியில் முடிந்ததால் பாஜக அமைதியாக இருந்து வருகிறது. இவ்வாறாக கடந்த 8 ஆண்டில் எதிர்கட்சிகள் ஆளும் பல மாநிலங்களிலும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எதிர்கட்சி எம்எல்ஏக்கள் மூலம் ஆட்சி அதிகாரங்களை பாஜக கைப்பற்றி வந்துள்ளது. மக்களவை தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் உள்ள நிலையில் இடைப்பட்ட காலத்தில் 15 மாநிலங்களில் சட்டப் பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. அதனால் அந்த மாநிலங்களில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளவும், எதிர்கட்சிகளின் ஆட்சியை வீழ்த்தவும் பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து செயல்பட்டு வருகிறது. ஜனநாயக அமைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கலைக்கப்பதற்காக, மத்தியில் ஆளும் பாஜக எடுக்கும் முயற்சிகளை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்….

You may also like

Leave a Comment

thirteen − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi