சென்னை: கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை பயணத்தை ராகுல் காந்தி மேற்கொள்ள உள்ள நிலையில், அது தொடர்பாக சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளுடன், தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய எஸ்.சி. பிரிவு தலைவர் ராஜூ லிலோதியா, எம்.பி ஜெயக்குமார், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வபெருந்தகை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கு பிறகு கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராஜூ கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள், சமூக நீதிக்கு இன்று பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், அம்பேத்கர் எழுதிய அரசியல் சட்டத்திற்கு பங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர். இந்திய அரசியல் சட்டத்தை பாதுக்காக்க ராகுல் காந்தி மக்கள் இடம் சென்று அதை எடுத்து சொல்ல இருக்கிறார். நாங்கள் இந்த அரசை பாதுகாக்க விரும்புகிறோம் அது எங்கள் கடமை என தெரிவித்தனர். சென்னையில் இன்னொரு விமான நிலையம் வேண்டும் அப்போது தான் வளர்ச்சி ஏற்படும். விமான நிலையம் வேண்டாம் என்றால் எப்படி வளர்ச்சி வரும் என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி மேற்கொள்ள இருக்கும் நடை பயணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்….