தேன்கனிக்கோட்டை, பிப்.7: தேன்கனிக்கோட்டை அருகே சுற்றித்திரியும் 20 யானைகளை, ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் நொகனூர் காட்டில் முகாமிட்டுள்ள 20 யானைகள், அருகில் உள்ள தாவரக்கரை, மலசோனை, கண்டகானப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் இரவு நேரங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளி, முட்டைகோஸ், பீன்ஸ், கத்தரிக்காய் போன்ற பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.
மேலும், கிராம பகுதியில் முகாமிட்டு சுற்றி திரிவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து, அட்டகாசம் செய்யும் யானைகளை தேன்கனிக்கோட்டை வனத்துறையினர் ஜவளகிரி வனப்பகுதி வழியாக கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.