மங்களூரு: மங்களூருவில் உள்ள எனபோயா பல்கலைக்கழகத்தில் 20க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்க நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: முதுகலை மாணவர்கள் மற்றும் நர்சிங் ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பல்கலைகழகத்திற்கு விடுமுறை விடப்படுகிறது. மருத்துவ கல்லூரி மருத்துவமனை மட்டும் வழக்கம் போல் செயல்படும். பேராசிரியர்கள் மற்றும் மற்ற ஊழியர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். அனைத்து மாணவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். தேர்வுகளின் கட்டுப்பாட்டாளர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஒரு தனி அறிவிப்பை வெளியிடுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுடன் நெருக்கமாக இருந்தவர்களுக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ராஜேந்திரன் கூறுகையில், கேரளாவில் இருந்து மாவட்டத்திற்குள் நுழையும் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம். இல்லை எனில் அவர்கள் எக்காரணம் கொண்டும் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கிடையில் எல்லை நுழைவு பகுதிகளில் கூடுதல் சோதனைச் சாவடிகள் திறக்கப்படும். கேரளாவிலிருந்து வரும் மாணவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை கட்டாயமாக சோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தார். தென்கனரா மாவட்டத்தில் கடந்த திங்கட்கிழமை ஒரே நாளில் 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 34813 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. …