வாழப்பாடி, டிச.3: சேலம் கிழக்கு மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு வரும் 17ம் தேதி நடைபெறுவதையொட்டி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், மாநாடு ஒருங்கிணைப்பாளருமான நேரு, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று 3 கி.மீ., தூரம் நடந்து சென்று மாநாட்டு பந்தல் மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருவதை பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது: பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநில மாநாட்டுக்காக 100 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டு பணிகள் இரவு -பகலாக நடைபெற்று வருகிறது. சுமார் 2 லட்சம் பேர் அமரக்கூடிய வகையில் பந்தல் அமைக்கும் பணிகளும், 3 லட்சத்து 20 ஆயிரம் சதுர அடியில் சமையல் செய்வதற்கான பந்தல் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கு வருகை தரும் முதலமைச்சருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டோம். இந்தியாவையே திரும்பி பார்க்கும் வகையில் இந்த மாநாடு பணிகள் நடைபெற்று வருகிறது.
மாநாட்டில் கலந்து கொள்ளும் இளைஞர்கள் மற்றும் தொண்டர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநாட்டில் குறைந்தபட்சம் 5 லட்சம் பேர் மாநில முழுவதும் இருந்தும் பங்கேற்க உள்ளனர். மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்காக பந்தலை ஒட்டியுள்ள பகுதிகளில் 400 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. காவல்துறை அறிவுரையின்படி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் வாகனங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பருவமழை காரணமாக சென்னையில் மழைநீர் தேங்காத வகையில் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள முதலமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார். சென்னையில் 137 இடங்கள் மழைநீர் தேங்குவதாக கண்டறியப்பட்டு அதில் 100க்கும் மேற்பட்ட இடங்கள் தற்போது முழுமையாக சரி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து இடங்களும் சரி செய்யப்படும். கடந்த காலங்களில் சரிசெய்யப்படாத பணிகள் அனைத்தும் தற்போது சீர்செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் நேரு கூறினார். அப்போது, கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, பார்த்திபன் எம்.பி., மாவட்ட துணை செயலாளர்கள் சுரேஷ்குமார், சின்னதுரை, மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, நெசவாளரணி அமைப்பாளர் ஆறுமுகம், மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மனோகரன், பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வன், முத்துலிங்கம், சோமசுந்தரம், சந்திரமோகன், நகர செயலாளர் பாலசுப்பிரமணியம், வேல்முருகன், மாவட்ட அமைப்பாளர்கள் சீனிவாசன், சேகர், திருநாவுக்கரசு, ரமேஷ், வரதராஜசேகர், தனசேகரன், ஒன்றிய செயலாளர்கள் மூர்த்தி, அன்பு, சிவராமன், சக்ரவர்த்தி, டாக்டர் செழியன், மாதேஸ்வரன், விஜயகுமார், மணி, பாலமுருகன், அழகுவேல், ரத்தினவேல், பேரூர் செயலாளர்கள் வெங்கடேசன் பாபு, செல்வம், மாவட்ட துணை அமைப்பாளர்கள் பழனிசாமி, கலைச்செல்வன், வெங்கடேசன், தனபால், கலைச்செல்வி, பன்னீர்செல்வம், மாவட்ட பிரதிநிதி வீரேந்திரதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.