வேலூர், பிப்.10: அண்ணாவின் 115வது பிறந்த நாளையொட்டி வேலூர் மத்திய சிறையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் சேர்ந்த ஆயுள் தண்டனை கைதிகளான சின்னசாமி (55) அர்ஜுனன் (65), திருப்பத்தூர் மாவட்டம் தாமலேரி முத்தூரைச் சேர்ந்த சரவணன்(41), மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையைச் சேர்ந்த செந்தில்குமார் (48) ஆகியோர் நேற்று இரவு முன்விடுதலை செய்யப்பட்டனர். இதேபோல் வேலூர் பெண்கள் தனி சிறையில் இருந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாரதா (50), திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி சார்ந்த சின்னம்மாள் (75) ஆகிய இருவரும் நேற்று இரவு முன் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று மட்டும் வேலூர் மத்திய சிறையில் இருந்து 4 பேரும் பெண்கள் சிறையிலிருந்து 2 பேரும் என மொத்தம் 6 பேர் முன் விடுதலை செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் சிறைவாசிகள் ஆதரவு சங்கத்தின் சார்பில் மளிகை பொருட்கள் அரிசி பருப்பு, புளி கடலை எண்ணெய் உள்ளிட்ட 21 வகையான பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சங்கத்தின் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான டி.எம்.விஜயராகவலு, சிறை கண்காணிப்பாளர் அப்துல் ரஹ்மான், செயலாளர் செ.நா.ஜனார்த்தனன், பெண்கள் சிறை அலுவலர் நீலாமணி, ஆண்கள் சிறை அலுவலர் அருள்குமரன், சிறை நல அலுவலர் மோகன், உதவி சிறை அலுவலர் துரை, அலுவலக கண்காணிப்பாளர் கே.நாகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.