போடி: கேரளா செல்ல அனுமதிக்காததால் போடிமெட்டு செக்போஸ்டில் நேற்று ஏராளமான வாகனங்கள் காத்திருந்தன. கொரோனா பரவல் காரணமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள், நெகட்டிவ் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே கேரளாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் கேரளாவிற்கு தினசரி வேலைக்கு செல்லும் தமிழக தோட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம், போடிமெட்டு செக்போஸ்டில் நேற்று ஏராளமான தோட்ட தொழிலாளர்கள் கேரளாவிற்கு செல்ல அனுமதி கேட்டனர். ஆனால் 2 டோஸ் தடுப்பூசி போடாததால் போலீசார் அனுமதிக்க மறுத்துவிட்டனர். எனவே தொழிலாளர்கள் ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். இதேபோல் சுற்றுலாப் பயணிகள் வந்த வாகனங்கள், வர்த்தக வாகனங்களும் கேரளா செல்ல அனுமதி கிடைக்காததால் நீண்டவரிசையில் காத்திருந்தன. தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘ஒரு வாரத்திற்கு முன் போடிமெட்டு வழியாக ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்களை கேரளாவிற்குள் அனுமதித்தனர். தற்போது 2 டோஸ் போட்டிருக்க வேண்டும் என கெடுபிடி காட்டுகின்றனர். ஒன்றிய அரசு குறைவாக தடுப்பூசி ஒதுக்கியதால், தமிழக மக்கள் பெரும்பாலும் ஒரு டோஸ் மட்டுமே போட்டுள்ளனர். கேரளா செல்ல 2 டோஸ் அவசியம் என்பது சிரமத்தை ஏற்படுத்துகிறது. தொழிலாளர்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்….