திருவண்ணாமலை, மார்ச் 4: திருவண்ணாமலை மாவட்டத்தில், போலியோ ஒழிப்பு சொட்டு மருந்து சிறப்பு முகாம் 1992 முகாம்களில் நேற்று நடந்தது. முகாமை, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். விடுபட்டவர்களுக்கு இன்று வீடு வீடாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயை முற்றிலுமாக ஒழிக்க ஆண்டுேதாறும் போலியோ தடுப்பு சொட்டுமருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்மூலம், போலியோ நோய் பெரும்பான்மையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நூறு சதவீதம் இலக்கை அடைய 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
அதன்படி, தொடர்ந்து 29வது ஆண்டாக நேற்று தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது.திருவண்ணாமலை மாவட்டத்தில், 5 வயதுக்குட்பட்ட 1,61,643 குழந்ைதகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதையொட்டி, 1992 சிறப்பு முகாம்களில் நேற்று சொட்டு மருந்து வழங்கப்பட்டது. மேலும், பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நடமாடும் சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாம்களில், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட 7,103 பேர் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமை, கலெக்டர் பா.முருகேஷ் தலைமையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். சொட்டு மருந்து செலுத்திக்கொண்டதன் அடையாளமாக, குழந்தைகளின் இடது சுண்டு விரலில் மை வைக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதார அலுவலர் செல்வகுமார், நகராட்சி ஆணையர் வசந்தி, தூய்மை அருணை ஒருங்கிணைப்பாளர் ப.கார்த்திவேல்மாறன், நகராட்சி துணைத் தலைவர் சு.ராஜாங்கம், நகர் நல அலுவலர் வீராசாமி மற்றும் தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், நேற்று நடந்த சொட்டு மருந்து முகாமில், பங்கேற்காத 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, இன்று வீடு வீடாக சென்று சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியில், சம்மந்தப்பட்ட பகுதிகளின் சுகாதார பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.