திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் கழக்கூட்டத்தில் கலால்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் 155 கிலோ கஞ்சா, 61 கிராம் எம்டிஎம்ஏவுடன் 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் கழக்கூட்டம் பள்ளித்துறை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பனை நடப்பதாக கலால்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து கலால்துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டை கண்காணித்து வந்தனர். நேற்று வீட்டுக்கு அருகே ஒரு கார் சந்தேகத்திற்கான முறையில் நின்று கொண்டு இருந்தது. இதையடுத்து கலால்துறையினர் காரில் சோதனை நடத்தினர்.
அப்போது காரில் 62 பாக்கெட்டுகளில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காரில் இருந்த ஜோஷோ (24), கார்லோஸ் (34) ஆகிய 2 பேரையும் கலால் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் மேலும் போதை பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களது வீட்டிலும் கலால்துறையினர் சோதனை நடத்தினர். இதில் பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பாக்கெட்டுகள் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அந்த வீட்டில் இருந்த ஷிபு (20), அனு ஆண்டனி (34) ஆகியோரிடம் இருந்து 61 கிராம் எம்டிஎம்ஏ போதை பொருளும் கைப்பற்றப்பட்டது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சா மற்றும் எம்டிஎம்ஏவை வாங்கி திருவனந்தபுரத்தில் விற்பனை செய்து வந்து உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.75 லட்சம் என்றும், எம்டிஎம்ஏவின் மதிப்பு ரூ.2 லட்சம் என்றும் கலால்துறையினர் தெரிவித்தனர்.