சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஒவ்வொரு 3 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தி ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கம். இந்நிலையில் போக்குவரத்து பணியாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்த குழு 3ம் கட்ட பேச்சுவார்த்தை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில், நிதித்துறை இணைச்செயலாளர் அருண் சுந்தர் தயாளன், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குழு உறுப்பினர் செயலாளர் அன்பு ஆபிரகாம், துணை குழு உறுப்பினர்கள், தொமுச, சிஐடியு அண்ணா தொழிற்சங்கம் உட்பட 65 தொழிற்சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். பின்னர், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நான்கரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மகளிர், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண சலுகைக்கான பேட்டாவினை ஓட்டுநர், நடத்துநர்களுக்கு வழங்குவது உள்ளிட்ட முக்கியமான 21 கோரிக்கைகளை முன்வைத்தார்கள். மேலும், போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். வரும் பொங்கலுக்கு பொதுமக்களின் தேவையினை பூர்த்தி செய்கின்ற வகையில் பேருந்துகள் இயக்கிட அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலக்கட்டத்திலும் குறிப்பாக ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில், தொழிலாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றித்தர வேண்டும் என்பதற்காக இந்த பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றள்ளது. இதுவே தொழிலாளர்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறைக்கு சான்றாகும். இவ்வாறு அவர் கூறினார். தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘போக்குவரத்து கழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி காலத்தில் பல வழித்தடங்களை தனியாருக்கு விட்டுக் கொடுத்து விட்டார்கள். அப்படி விட்டு கொடுக்கப்பட்ட வழித்தடங்களை திரும்பவும் அரசு கைப்பற்ற வேண்டும். அதை தொடர்ந்து அந்த பேருந்து இயக்கம் முழுமையாக அரசுக்கு வருவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என்று உறுதி அளித்து உள்ளார்கள்.கடந்த பத்தாண்டு காலத்தில் தண்டனை பெற்ற தொழிலாளர்களுடைய தண்டனைகள் அத்தனையும் ரத்து செய்து அவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு போன்றவை வழங்கப்பட வேண்டும். ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி வழங்குவது, மருத்துவ காப்பீடு வழங்குவது, இவை எல்லாவற்றையும் கொள்கை அளவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். இதனை முதல்வர் மற்றும் நிதித்துறை செயலாளர் அவர்களுடன் கலந்து பேசி விரைவில் நல்ல ஒரு ஒப்பந்தத்தை செய்து முடிப்பதாக அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை ஒரு நல்ல முன்னேற்றமாக பார்க்கிறோம்….
14வது ஊதிய ஒப்பந்த குழு 3ம் கட்ட பேச்சுவார்த்தை தமிழக அரசிடம் 21 கோரிக்கைகள் வைத்த தொழிற்சங்கங்கள்: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
previous post