லால்குடி, செப் 3: லால்குடி குறுவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு எம்எல்ஏ செளந்தரபாண்டியன் பரிசு வழங்கினார். லால்குடி குறுவட்ட அளவில் லால்குடி, புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது. 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவு விழாவிற்கு மால்வாய் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஜெயராஜ் வரவேற்று பேசினார். புள்ளம்பாடி ஒன்றியகுழு தலைவர் ரசியாகோல்டன் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் பிரகாசம், ஊராட்சி மன்ற தலைவர் திவ்யபாலா, முன்னாள் தலைவர் செந்தாமரைகண்ணன், டால்மியா பள்ளி தலைமையாசிரியர் தர் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். லால்குடி செளந்தரபாண்டியன் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கி பாராட்டி பேசினார். விளையாட்டு போட்டி ஏற்பாடுகளை மால்வாய் பள்ளி தலைமையாசிரியர் ஜெயராஜ், உடற்கல்வி ஆசிரியர் செந்தில் செய்திருந்தனர். 2 நாள் போட்டிகளில் கலந்து கொண்ட 2,500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், ஆசிரியர்களுக்கு உணவு மற்றும் பஸ் போக்குவரத்து வசதி செய்து கொடுத்த செளந்தரபாண்டியன் எம்எல்ஏவுக்கு ஆசிரியர்கள் , மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.