ஊட்டி: ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று துவங்கி 5 நாட்கள் நடத்தப்படுகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடைவிழாவையொட்டி, தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சியை இன்று காலை 10 மணிக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். கண்காட்சி 5 நாள் நடக்கிறது. விழாவையொட்டி பூங்கா முழுவதிலும் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 45 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 18 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மயில் அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் மலர்களை கொண்டு சீட்டா, டால்பின்ஸ், பாண்டா கரடி, பட்டாம் பூச்சி, காண்டா மிருகம், புறா, வரையாடு, பனை மரம், நடனமங்கை செங்காந்தள் மலர், செல்பி ஸ்பாட் உட்பட பல்வேறு அலங்காரங்கள் உருவாக்கப்படவுள்ளன. ஊட்டி 200, தாவரவியல் பூங்கா துவக்கப்பட்டு 175 ஆண்டுகள் ஆன நிலையில், ஊட்டி கார்டன் 175 அலங்காரம் மற்றும் 125வது பிளவர் ஷோ போன்றவை பல ஆயிரம் மலர்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. 15 தனியார் மற்றும் அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான காட்டேஜ்கள், லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல்கள் நிரம்பி வழிகின்றன. அனைத்து சாலைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.